ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க புதன்கிழமை இரண்டாவது நாளாக தடை நீடித்தது.
கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர், தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரிக்குக் கடந்த இரு நாள்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதில், செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் காவிரியில் நொடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வந்தது. புதன்கிழமையும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதாலும், பாதுகாப்புக் கருதியும் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இத் தடை புதன்கிழமையும் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.