நடிகர் சந்தானம் நடித்த ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நடிகர் சந்தானம் நடித்த ஏ1 (அக்யூஸ்டு நம்பர் ஒன்) என்ற திரைப்படம் ஜூலை 27-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புதன்கிழமை புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ராஜநாராயணன் என்பவர் தயாரிப்பில், ஜான்சன் இயக்கி, நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் ஏ1. இந்தப் படத்தில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்தும், புண்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும். நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மனுவின் நகல் தமிழக ஆளுநர், முதல்வர், டிஜிபி, திரைப்படத்துறை தணிக்கை குழுத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது, பொதுச் செயலர் ரவி, செயலர் ஸ்ரீராம், இளைஞரணி செயலாளர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு செயலர் விஜயராகவன் உள்பட பலர் உடனிருந்தனர்.