
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக, பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பாதக் அமர்வில் ஏப்ரல் 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன், பி. குமார் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எஸ். ஹரிஹரண், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஜாமீனில் உள்ளனர். இந்த மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றார்.
தில்லி காவல் துறை சார்பில் ராகுல் மெஹ்ரா ஆஜராகி, இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இவற்றை ஒரே வழக்காகக் கருதி விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றார்.
வாதங்களைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி எஸ்.கே. பாதக், ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள சுகேஷ் சந்திர சேகரின் மனு ஏப்ரல் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பாட்டியலா நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரும் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓரி அமர்வில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி. தினகரன் தொடர்புடைய வழக்கில் ஏற்கெனவே ஆஜராகி இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்து நீதிபதி மனோஜ் குமார் ஓரி விலகிக் கொண்டார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் சேகர் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லிகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். ஹரிஹரண், பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார். சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சேதன் சர்மா, ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, மனுக்களைப் படிக்க வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.