வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் பயன்படுத்தவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக 2017-18-ம் நிதி ஆண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 2.36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் ரூ. 2.08 லட்சம் கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 28 ஆயிரத்து 179 கோடி பயன்படுத்தவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. எனவே, மக்களைக் கவர வேண்டும் என்பதற்கான அறிவிப்புகளை வெளியிடுவதை அரசு கைவிட்டு, ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.