கடல்வழியாக பீடி இலைகளை கடத்தியதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அவர்கள் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை புத்தளம் தளவிலா தேவாலயத்தில் இருந்து வடகிழக்கே 22 கடல்மைல் தொலைவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு நாட்டுப்படகில் திடீரென அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் படகில் 74 மூட்டைகளில் 2,379 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, படகில் இருந்த தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆரோக்கியம், பிராங்கோ, தொம்மை, எட்வர்ட், ரமேஷ், மற்றொரு ஆரோக்கியம் ஆகிய 6 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை புத்தளம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இலங்கை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் குறித்தும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.