ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரையிலான 4 நாள்களுக்கு விரைவு ரயில்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை, பாண்டியன் ஆகிய விரைவு ரயில்கள், திருச்சிக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரயில், செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் , மன்னார்குடிக்கு இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்கள் இரு மார்க்கமாகவும் ஒரு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும். இதுபோல, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் இருமார்க்கமாகவும் ஒரு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இத்தகவல், தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.