சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 44 -ஆவது கோடைவிழா மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோடை விழா மலர் கண்காட்சியை, தமிழ்நாடு தோட்டக்கலை துறை இயக்குநர் என்.சுப்பையன், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் மலர் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 31 முதல் ஜூன் 1, 2 ஆகிய தேதிகள் வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு அண்ணா பூங்காவில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரோஜா, கார்மேசன், ஜெரிபெரா, ஆஸ்டர் சாமந்தி போன்ற மலர்களால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம், இந்திய விமானப் படை விமானி அபிநந்தனுடன் கூடிய மிக் 21 விமானம், பென்குயின்கள், கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரிகள் ஆகியவை குழந்தைகளை கவரும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்றுகள், வளைவுகள், புகைப் படம் எடுத்துக் கொள்ளும் மலர் நிலையம் ஆகியவையும் மலர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், தனியார் ஹோட்டல்கள் பங்களிப்பில் கண்ணாடி மாளிகையில் தில்லி செங்கோட்டை, விலங்குகள், பறவைகள் என பல்வேறு வடிவங்கள் காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக காட்டெருமை வடிவம் இடம்பெற்றுள்ளது. மலர் கண்காட்சியின் முதல் நாளில் திரளான பொதுமக்கள் பங்கேற்று, கண்டுகளித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.