தொடக்க கல்வியில் தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் அ.நடராஜன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரும் கல்வியாண்டில் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் தென் மாவட்டங்களில் ஆசிரியர் கலந்தாய்வின்போது மாவட்ட மாறுதல் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வரும் கலந்தாய்வில் மாறுதல் வழங்க வேண்டும். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக மூட வேண்டும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வழங்கும் நிதியுதவியை அரசுப் பள்ளிக்கு வழங்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.