சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அந்தமானில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் 45 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது பாதுகாப்புடன் செல்லவேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும்.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.