காரைக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 43 லட்சம் மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிளை உள்ளது. அந்த வங்கியில் வாடிக்கையாளர்களிடமிருந்து அடகு பிடிக்கப்பட்ட நகைகள் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டன. இதில், கடந்த 23-9-2016 முதல் 13-3-2019 வரை உள்ள காலத்தில் 10 வாடிக்கையாளர் பெயரில் அடகு வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள நகைகள் போலி என தெரிய வந்தது.
விசாரணையில், அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய காரைக்குடி ஆவிச்சி செட்டியார் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (59) என்பவர் மோசடி செய்து போலி நகைகளை வைத்து ரூ. 43 லட்சம் பெற்று, தனது மகன் ரத்தினகுமாரிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் குறிஞ்சிநாதன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் செய்தார்.
இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது மகன் ரத்தினகுமார் ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து ராமமூர்த்தியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ரத்தினகுமாரை தேடி வருகின்றனர்.