மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலிருந்து இந்தியக் குடியரசுக் கட்சி விலகிவிட்டது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.
குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நடந்து முடிந்த மக்களவை மற்றும் பேரவை இடைத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்தியக் குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். தமிழக மக்கள் மாற்று அரசியலை விரும்புகின்றனர். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் இதை உறுதி செய்கின்றன.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறி விட்டது. அக்கட்சியின் படுதோல்விக்கு இது முதல் காரணமாகிறது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலையே திமுகவின் வெற்றிக்கு சாதகமாகி விட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ரூ. 3,600 கோடி நிதியை மத்திய அரசு வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்களின் அத்யாவசிய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது தவறு. தேர்தல் ஆணையம் உடனடியாக இத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் மாநில பொதுச் செயலர் அனந்தலை தங்கராசு, மாநில அமைப்புச் செயலர் தன்ராசு, மாநில இளைஞர் அணிச் செயலர் கௌரிசங்கர், மாநில தொழிற்சங்கப் பிரதிநிதி மலைராஜன், வேலூர் மாவட்டத் தலைவர் இரா.சி. தலித்குமார், மாவட்டச் செயலர் பூமியா அசோக்குமார், மாவட்டப் பொருளாளர் ச. வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.