பி.இ. கலந்தாய்வு: 1.33 லட்சம் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு: 15 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான 10 இலக்க சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பி.இ. கலந்தாய்வு: 1.33 லட்சம் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு: 15 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்


பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான 10 இலக்க சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை வெளியிட்டார். 
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
 தமிழகம் முழுவதும் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை, இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. 
இந்தக் கலந்தாய்வு வரும் ஜூன் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, வரும் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
சமவாய்ப்பு எண் வெளியீடு: இந்த ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களுக்கு இந்த சமவாய்ப்பு எண் அடிப்படையில் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். இந்த சமவாய்ப்பு எண் விவரம், மாணவர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.
மேலும், www.tneaonline.in  என்ற இணையதளத்திலும் சமவாய்ப்பு எண்ணை மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
15 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கை நிறுத்தம்: சமவாய்ப்பு எண்களை வெளியிட்ட பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:
மாணவர் சேர்க்கை குறைந்த காரணத்தால், இந்த ஆண்டு 15 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தியுள்ளன. எனவே, அந்தக் கல்லூரிகளின் இடங்கள் கலந்தாய்வில் இடம்பெறாது. அதேபோல, பாலிடெக்னிக் படிப்புகள் மீதான ஆர்வமும் மாணவர்களிடையே இந்த ஆண்டு குறைந்துள்ளது. மாணவர்கள் அவரவர் மனநிலையைப் பொருத்தே படிப்பைத் தேர்வு செய்கின்றனர். கல்வியை அவர்கள் மீது திணிக்க முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com