சென்னை: பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து காலையில் தான் பதிவிட்ட ட்வீட்டர் பதிவை முதல்வர் பழனிசாமி நீக்கியுள்ளார்.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் புதிய வரைவு திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
அதையடுத்து பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி புதன் காலை வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து கூறியுள்ளதாவது:
தமிழை 3 ஆவது மொழியாக்குங்கள். பிற மாநிலங்களில் தமிழை 3 ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். அவ்வாறு விருப்ப மொழியாக தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பது, உலகின் சிறந்த மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து காலையில் தான் பதிவிட்ட ட்வீட்டர் பதிவை முதல்வர் பழனிசாமி தற்போது நீக்கியுள்ளார்.
பிரதமர் மோடியை நேரடியாக டேக் செய்து பதிவிட்டிருந்த காரணத்தால், அதை நீக்குமாறு முதல்வருக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.