: நடிகர் ஜெயராம் வீட்டில் நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அக்கட்சித் தலைவர் சீமான், திருவள்ளூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
தமிழ்ப் பெண்களை நடிகர் ஜெயராம் தரக்குறைவாக பேசியதாக கடந்த 2010-ஆம் ஆண்டு சர்ச்சை எழுந்தது. அதைக் கண்டிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டை முற்றுகையிட்டு கற்களை வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக அந்த வீட்டின் நிர்வாகியான சென்னை போரூரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (35), வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்பட அக்கட்சியினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து வழக்கை விரைவாக முடிப்பதற்காக திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். வழக்கு, மாவட்ட நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வரும் 18ஆம் தேதி ஆஜராகும்படி சீமான் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.