திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று மீண்டும் இணைந்தார்.
'கொலையுதிர்காலம்' திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திரை பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பெண்களை இழிவாக பேசிய விவகாரத்தில் நடிகர் ராதாரவியை திமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.
திமுகவில் இணைவதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.