எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு புதிதாக தொடங்கப்படவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள 3,350 எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்யலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
நிகழாண்டில் தமிழகத்தில் மொத்தம் 1.23 லட்சம் பேர் நீட் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், நான்கு நாள்களில் 45,026 பேர் விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்து பதிவு செய்துள்ளனர். அவர்களில் 35,386 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது.