தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டி கிராமத்தில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக, அரசு வழக்குரைஞர் மனோகரன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஸ்டாலின் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று வருவதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 12-ஆம் தேதிக்கு நீதிபதி எம்.கே. ஜமுனா ஒத்திவைத்தார்.