சுமார் 750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து அதை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் சந்திரிகா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கு 300 முதல் 350 குழந்தைகள் பிறக்கின்றன. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய முறையில் சிகிச்சையளித்து பாதுகாக்க வேண்டும். அந்த வகையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் எடை குறைவாக பிறந்த 15 குழந்தைகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காளையார்கோவில் அருகே மரக்காத்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி மஞ்சுளா (32) என்பவருக்கு கடந்த ஏப்ரல் 19 -ஆம் தேதி சுமார் 750 கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. குறைந்த எடையுடன் பிறந்த அந்தக் குழந்தையை தனியறையில் வைத்து கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேல் சிகிச்சை அளிக்கபட்டது.
தற்போது குழந்தை நலமுடன் உள்ளது. தமிழக முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் எந்தச் செலவுமின்றி குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஏற்கெனவே குறைந்த எடையுடன் பிறந்த திருமண்பட்டி அழகுமீனாள் மற்றும் கண்ணங்குடி ஜோதி ஆகிய இருவரின் குழந்தைகளையும் வரவழைத்துள்ளோம். அந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, கண் மற்றும் இதய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன என்றார்.