அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ரத்து செய்துள்ளார்.
மதுரை திருமங்கலம் அருகே அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்கள் பணியாற்ற மற்றொரு சமுதாய மக்கள் தரப்பிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதன் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார், அந்த பட்டியல் இனப் பெண் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.