அதிமுகவில் இரட்டைத் தலைமையே தொடரும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். பொதுச் செயலாளர் தேர்தல் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையே இருக்க வேண்டுமென கட்சியின் எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சை எழுப்பியது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அளித்த பேட்டி : கட்சி வளர்ச்சி, உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், நடந்த தேர்தலில் தோல்வி ஏற்பட்டதற்கான காரணம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலும், அடுத்து சில ஆண்டுகளில் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எந்தக் கருத்து வேறுபாடு இல்லாமல் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதிமுகவில் இரட்டைத் தலைமையே தொடரும். பொதுச் செயலாளர் தேர்தல் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார்: கட்சியில் நடைபெறும் ஒரு வழக்கமான கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்துதான் பேசப்பட்டது. இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதித்தோம். ஒற்றைத் தலைமை குறித்து எதுவும் பேசவில்லை. கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி: கூட்டத்துக்கு சிரித்துக் கொண்டே சென்றோம். சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம். எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த தேர்தல் முடிவுகள் குறித்தும், வரும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்தும் பேசினோம். எதுவாக இருந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள் என்றார் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி.