கலந்தாய்வு நடத்தாமல் பணியிடங்கள் ஒதுக்கீடு: மருத்துவர்கள் புகார்

முதுநிலை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் தன்னிச்சையாக பணியிடங்களை ஒதுக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும்


முதுநிலை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் தன்னிச்சையாக பணியிடங்களை ஒதுக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் முறையிட்டு வருகின்றனர். 
 எம்பிபிஎஸ்  படித்த மருத்துவர்கள் கிராமப்புறங்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றுவதுண்டு.  
முதுநிலை படிப்புகளில் சேரும்போது அவர்கள் பணியாற்றிய  இடங்களைப் பொருத்து  நுழைவுத் தேர்வில் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் பின்னர், அவர்கள் மருத்துவ மேற்படிப்பை நிறைவு செய்தவுடன் கலந்தாய்வு நடத்தி அரசு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.  
கிராமப்புறங்களில் எத்தனை ஆண்டுகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சேவையாற்றியுள்ளனர் என்பதை கணக்கிட்டு பணி மூப்பு அடிப்படையில் அந்தக் கலந்தாய்வு நடத்தப்படும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஊரகப் பகுதி மருத்துவ சேவைகள் என அவை வகைப்படுத்தப்பட்டு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். 
ஆனால், நிகழாண்டில் அத்தகைய கலந்தாய்வே நடத்தப்படவில்லை என்றும், மருத்துவக் கல்வி இயக்குநரகம் தன்னிச்சையாக பணியிடங்களை அவர்களுக்கு ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊரகப் பகுதிகளிலும், தாலுகா மருத்துவமனைகளிலும் மருத்துவ மேற்படிப்பை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
இதுகுறித்து பணியிட ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: 
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளனவா, இல்லையா? என்பது குறித்த விவரங்கள் எவருக்கும் தெரியப்படுத்தப்படுவதில்லை. அந்த விவகாரத்தில் எந்த வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கலந்தாய்வு நடத்தினால்தான் அதுகுறித்த விவரங்கள் தெரியவரும். ஆனால், நிகழாண்டு அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. 
தன்னிச்சையாக ஊரகப் பகுதிகளில் எங்களுக்கு பணியிடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 850-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கூடுதலாக உள்ளனர்; இந்த நிலையில் புதிதாக எவ்வாறு அங்கு பணியிடங்களை  ஒதுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com