நடிகர் கிரேஸி மோகனின் மரணம் இயற்கையானது, அதுகுறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அவரது சகோதரர் மாது பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் புதன்கிழமை அனுப்பியுள்ள விடியோ பதிவு:
கிரேஸி மோகன் காலமான செய்தியைக் கேட்ட அவரது ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். நேரிலும், சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட இணைய தள வசதிகள் மூலமாகவும் தங்களது இரங்கலை பல பிரபலங்கள், உலகம் முழுவதிலும் உள்ள நண்பர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். எல்லோருமே மீளாத் துயரில் இருக்கிறோம். எங்கள் துயரில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
அவர் கஷ்டப்பட்டோ, வியாதி வந்தோ இறக்கவில்லை. அவர் மரணம் முழுக்க முழுக்க இயற்கையானது. ஆனால் அதிர்ச்சியானது. சர்க்கரை வியாதி உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் அவருக்கு கிடையாது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கூட பரிசோதனை செய்து பார்த்திருக்கிறோம். அவர் காலமான திங்கள்கிழமை (ஜூன் 10) கூட அவருக்கே உரித்தான பாணியில் என்னிடம் பேசினார். திடீரென்று, மூச்சு முட்டுவது மாதிரி இருக்கிறது. அடி வயிற்றில் லேசான வலி இருக்கிறது. வர முடியுமா...? என்று என்னை அழைத்தார்.
உடனே ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சென்றோம். அங்கிருந்த மருத்துவர்கள் அன்பாக கவனித்தார்கள். இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணம் இயற்கையானது. மருத்துவர்கள் மீது எந்தக் குறையும் இல்லை. அதனால் அவரது உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மாது பாலாஜி.