குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள், பொது மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரம் ஈட்டும் வகையில் செயல்திட்டங்களை வகுத்து, ஏழ்மை இல்லாத நிலையை ஏற்படுத்தி குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
குழந்தையை வேலைக்கு அனுப்பும் பெற்றோரிடமும், குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தும் நபரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் அரசு, தனியார் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். குழந்தைகளை கடைகளிலோ, நிறுவனங்களிலோ, தொழிற்சாலைகளிலோ, வீடுகளிலோ என்று எங்காவது தொழிலாளர்களாகப் பணியில் ஈடுபடுத்தினால் பணியில் அமர்த்தியவர்கள் மீதும், பணிக்குக் கொண்டு சென்றவர்கள் மீதும் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்றார்.
இரங்கல்: தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த அனுதாபம். அவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மாநில அரசுகள் விரைவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.