தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள்விழா மற்றும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டதை தற்போது தகர்த்துள்ளது திமுக. அதிமுகவை நம்பி ஏமாந்த மக்கள் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சரித்திர வெற்றியைத் தந்துள்ளனர். மக்களவை தேர்தலைப் போலவே உள்ளாட்சி, சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி வெற்றியடையும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்புக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே சான்று.
சட்டப் பேரவையைக் கூட்டாமல் தற்போதைய அரசு இருந்து வருகிறது. ஏனென்றால் சட்டப் பேரவையைக் கூட்டினால், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அதிமுக அஞ்சுகிறது. சட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நன்மை தரும் நல்ல செய்தி வந்துசேரும் என்றார்.
முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ராசா, ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் பேசினர்.