தலைக்கவசம் விவகாரம்: அபராதத் தொகையை அதிகரிக்கும் அரசு உத்தரவை அமல்படுத்த உத்தரவு

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அதிகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை ஒரு வார காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தலைக்கவசம் விவகாரம்: அபராதத் தொகையை அதிகரிக்கும் அரசு உத்தரவை அமல்படுத்த உத்தரவு


தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அதிகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை ஒரு வார காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால்தான் 70 முதல் 90 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. 
தலைக்கவசம் அணியாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 91 ஆக இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 2017-ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 956 ஆகக் குறைந்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், மோட்டார் வாகன சட்ட விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த செயலியின் மூலம் 51 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் சாலை பாதுகாப்புக்காக கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரூ.605.55 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 2018-ஆம் ஆண்டில் 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு எதிராக 39 லட்சத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போது உடனடி அபராதம் வசூலிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
அந்த இயந்திரங்களை கையாள காவல்துறையினருக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த இரண்டு வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உள்பட அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும். 
மேலும் அபராதத் தொகை யை அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை ஒரு வார காலத்துக்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com