பிரமோற்சவத்தையொட்டி, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்ரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாள் வீற்றிருந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சப்த விடங்க தலங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவம் கடந்த மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தேருக்கான பூஜைகள் செய்யப்பட்டு காலை 6 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முன்னதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர்,
சண்டிகேசுவரர், நீலோத்பாலாம்பாளுடன் செண்பக தியாகராஜசுவாமி தேருக்கு எழுந்தருளினர். அப்போது யதாஸ்தானத்திலிருந்து செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடனத்தில் எழுந்தருளினார்.
வலம் வந்த 5 தேர்கள்: பெரிய தேரில் செண்பக தியாகராஜசுவாமியும், சிறிய தேரில் நீலோத்பாலாம்பாளும் வீற்றிருந்தனர். விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீற்றிருந்தனர். விநாயகர், சுப்ரமணியர், செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாள், சண்டிகேசுவரர் தேர்கள் என வரிசைப்படி இழுக்கப்பட்டன.திரளானோர் தேரோட்டத்தில் கலந்துகொண்டு 5 தேர்களை இழுத்துச் சென்றனர். கோயிலுக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தேர் இழுத்துச் செல்லப்பட்டு மாலை நிலையை அடைந்தது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.