நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்எல்ஏவை கைது செய்யத் தடை

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோரை ஜூன் 18-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோரை ஜூன் 18-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கிண்டியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் இடம் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தை முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏ.வுமான மா.சுப்பிரமணியன், தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் விவகாரம் தொடர்பாக போலீஸார் பதிலளிக்கவும், புகார்தாரரான பார்த்திபன் மனு தாக்கல் செய்ய அனுமதியளித்தும் உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது புகார்தாரரான பார்த்திபன் தரப்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சானாவை கைது செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com