பிரதமர் மோடியை மிகப் பெரிய தலைவராக சித்திரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
நரேந்திர மோடியை மிகப் பெரிய தலைவராக சித்திரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு. இந்தியா முழுவதிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக ரூ.27,000 கோடியை தேர்தலுக்காக மட்டும் செலவு செய்துள்ளது. புல்வாமா தாக்குதலை பெரிதுபடுத்தி பாஜக பெருமை தேடிக் கொண்டது. எனினும், மதச்சார்பற்ற கூட்டணிக்கும், மத அடிப்படைவாதிகளுக்குமான போட்டியாக கடந்த மக்களவைத் தேர்தல் இருந்தது. தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி இணைந்ததுபோல் இந்திய அளவில் இணையவில்லை.
பாஜக ஆட்சியில் இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்பட அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளும் சிதைக்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் காப்பதும், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதும்தான் முதல் குறிக்கோளாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை என்பதை தேர்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் ஒத்து போகவில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது என்றார் அவர்.
மேலும், மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.