லோக் ஆயுக்த தலைவர், உறுப்பினரை தகுதியிழப்புச் செய்யக்கோரி வழக்கு

லோக் ஆயுக்தவின் தலைவர் மற்றும் உறுப்பினரை தகுதியிழப்புச் செய்யக்கோரும் மனுவை, அது தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.


லோக் ஆயுக்தவின் தலைவர் மற்றும் உறுப்பினரை தகுதியிழப்புச் செய்யக்கோரும் மனுவை, அது தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த முருகன் தாக்கல் செய்த மனு:
தமிழக லோக் ஆயுக்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை தமிழக பணியாளர்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறைச் செயலர் கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி வெளியிட்டுள்ளார். 
லோக் ஆயுக்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவதாஸ் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு நெருங்கிய உறவினராவார். அதேபோல ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜெயபாலன் 24 ஆண்டுகள் ஏழரை மாதங்கள் மட்டுமே பணி அனுபவம் உள்ளவர். 
லோக் ஆயுக்தவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமன விதிகளுக்கு எதிராக இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, இருவரையும் தகுதியிழப்புச் செய்து, குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் தகுதியானவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள், இந்த மனுவை லோக் ஆயுக்த தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com