தமிழக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
இதுகுறித்து, நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நம் மாநிலத்தில் அந்தத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டும், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. அங்குள்ளஅனைத்து அணைகளும் நிரம்பி, தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்படும்போதுதான் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது. மாநில அரசு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
வஞ்சிக்கும் மத்திய அரசு: முன்னதாக, கன்னியாகுமரி அருகிலுள்ள சாமிதோப்புக்கு வந்த முத்தரசன் நிருபர்களிடம் கூறியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 2021 வரை முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர, மாநில வளர்ச்சித் திட்டம் உள்பட வேறு எதைப்பற்றியும் கவலையில்லை. தமிழகத்தின் நலனுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம், புயல் பாதிப்பு போன்றவற்றில் தமிழகத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை என்றார் அவர்.