தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, கடலூரில் 106 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை தெற்கு, திருத்தணியில் தலா 105 டிகிரி, மதுரை விமானநிலையம், பரங்கிப்பேட்டையில் தலா 104 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருச்சி, வேலூரில் தலா 103 டிகிரி, வேலூரில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுவீசும் என்றார் அவர்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தலா 20 மி.மீ., பேச்சிப்பாறை, குழித்துறை, சுருளக்கோடு, தேனி மாவட்டம் பெரியாறு, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.