சென்னை: திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் , கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான சிவசுப்பிரமணியன் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் திடீரென்று இயற்கை எய்தினார் என்று பேரிடியாக வந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன் இளமைக்காலம் முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றி, பிறகு 1971 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திரு சிவசுப்பிரமணியம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தி.மு. கழகத்திற்கு தந்த ஒரு சிறந்த செயல்வீரர் ஆவார். ஆண்டிமடம் ஒன்றியக் கழகச் செயலாளர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக துணைச் செயலாளர், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர், தலைமைக் கழக சட்டதிருத்தக்குழு உறுப்பினர் என்று கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் அனைவரும் பாராட்டத்தக்க அளவுக்குப் பணியாற்றியவர்.
ஆண்டிமடம் ஒன்றியப் பெருந்தலைவராக, பிறகு 1989-1991 முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திரு சிவசுப்பிரமணியன் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தொகுதிக்காக எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை ஆற்றியவர். பிறகு 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கழகத்தின் சார்பில் ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்து வைத்து வாதாடியவர்.
திராவிட இயக்கத்தின் கொள்கைக் குன்றமாக, உறுதிமிக்க லட்சிய வீரராகத் திகழ்ந்து- கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அவரது மகனுமான திரு சிவசங்கருக்கும், உறவினர்களுக்கும்,கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.