இது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்: கொந்தளிக்கும் சீமான் 

கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்... 
இது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்: கொந்தளிக்கும் சீமான் 

சென்னை: கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் கழிவுகளைச் சேமித்து வைக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கிற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அளிக்கக்கூடிய நாசகர திட்டமாகும்.

தமிழக மக்களுக்கும், இந்த மண்ணிற்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கிற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில்.. மானுட வாழ்க்கைக்கும், இந்த நிலத்திற்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடிய அணுக்கழிவுகளைச் சேமித்து வைக்க அணுக்கழிவு மையத்தை கூடங்குளம்அணு உலை அருகிலேயே அமைக்க முற்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டம் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.

கூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு 15 நிபந்தனைகளை விதித்தே உச்ச நீதிமன்றம் இயங்க அனுமதித்தது. அவற்றுள் முதன்மையானது, தற்காலிக அணுக்கழிவு மையத்தை (AFR) ஐந்தாண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்பதாகும். அக்காலக்கெடு 2018, மார்ச் மாதத்தோடு முடிவடைந்த நிலையிலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் கேட்டிருக்கிறது இந்திய அணுசக்தித்துறை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மென் நீர் உலை என்பதால் ஏகப்பட்ட சிக்கல்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வருவதாகக் கூறி, தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கே திக்கித் திணறி வருவதை இந்திய அணுசக்தித் துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது. மேலும் கூடங்குளம் அணு உலை தொடர்பாக நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள் அணு உலை அமைக்க பட்ட விதத்திலேயே இருக்கின்ற சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இத்தகைய அசாதாரண நிலையில் உருவாக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த நிலையிலும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது. இந்த மண்ணில் வாழக்கூடிய மண்ணின் மக்களை சோதனைக்கூட எலிகளாக கருதி இது போன்ற பேரழிவு திட்டங்கள் இந்த மண்ணில் நடைமுறைப்படுத்தப்படுவது இம்மண்ணில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழனின் உயிர் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் பெருந்தீங்கினை ஏற்படுத்துவது ஆகும்.

ஒருவேளை தற்காலிக அணுக்கழிவு அமையம் அமைக்கப்பட்டுவிட்டாலும்கூட அத்தோடு சிக்கல் முழுவதுமாகத் தீரப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் அணுக்கழிவுகளை தற்காலிக மையத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு, அவற்றை அதிக ஆழத்தில் அமைக்கப்படக்கூடிய நிரந்தர அணுக்கழிவு மையத்திற்குப் (Deep geological repository - DGR) பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையத்தை எங்கு அமைப்பது என்பதையே இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்யவில்லை. இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம், கோலாரில் பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் அமைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தபோது, அதற்கு அம்மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி முற்றாகக் கைவிடப்பட்டது. இதுவரை எந்த இடத்தில் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பது என்கின்ற எந்த முடிவினையும் இந்திய அணுசக்தி துறை எடுக்கவில்லை.

நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறாத நிலையில், கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கஇந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்.

எனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை (14-06-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் எனது தலைமையில் திருநெல்வேலி, இராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதுசமயம், இனமானத்தமிழர்களும், உயிரினும் மேலான உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று இப்பேரழிவுத்திட்டத்தை விரட்டியடித்து நம் தாய் மண்ணை காத்திட அணியமாக வேண்டும் என உரிமையோடு அழைக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com