சுற்றுச்சூழலை முன்னிறுத்திய மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பசுமை விருதுகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் வீர ராகவ ராவ், நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
சிறப்பாகச் செயல்பட்ட தனியார் நிறுவனங்களான அதானி நிறுவனம், ஜெயவிஷ்ணு டெக்ஸ், தி ராம்கோ சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும், காஞ்சிபுரம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, விருதுநகர் மெப்கோ கல்லூரி, ராம்கோ வித்யாலயா ஆகியவற்றுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களின் தடை உத்தரவைச் சிறப்பாக செயல்படுத்திய மண்டல ஒருங்கிணைப்பாளரும், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளருமான பெ.அமுதா, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோருக்கும் விருதுகளை முதல்வர் வழங்கினார்.