படம் வெளியாகும் போது நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்ப்பந்தத்தில் சிக்க வைப்பதைத் தடுக்க சட்ட ரீதியான பாதுகாப்பு தரப்படும் என்று பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் போட்டி களத்தில் உள்ளனர். இரு அணியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாண்டவர் அணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ஆய்வாளர் குழு அமைத்து சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் உண்மையான வடிவம் மீண்டும் வெளி கொண்டு வரப்படும். திரைப்படம் வெளியாகும் போது நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்ப்பந்தத்தில் சிக்க வைப்பதை தடுக்க சட்ட ரீதியான பாதுகாப்பு தரப்படும்.
தற்காலிகமாக தடைபட்டிருந்த நாடக விழாக்கள், போட்டிகள், விருது விழாக்கள் புதிய கட்டடத்தில் அரங்கேறும். தகுதியான கலைஞர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழியின் பணமதிப்பு உயர்த்தப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது.
3 ஆண்டு கால சாதனைகள்: கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தங்கள் நிர்வாகத்தின் சாதனை என பாண்டவர் அணி குறிப்பிட்டுள்ளது.