சென்னை: தமிழகத்தில் ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக் கூடாது, இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அலுவலர்கள் பேசும் போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது. என்று தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஆணவமாகவும் அடாவடித்தனமாகவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் பேசக்கூடாது, இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு. மேலும் மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடி வருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என எச்சரிக்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரி உத்தரவிட்டு, அதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர்கள், அதிகாரிகள் அந்தந்த பகுதி மொழிகளில் பேசக் கூடாது என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டித்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.