தமிழகத்தில் ரூ.84.33 கோடியில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் சென்னையில் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் 19 கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
அதேபோன்று நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.53 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 21 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.27 கோடியே 84 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான கட்டடங்கள் என மொத்தம் ரூ.84.33 கோடி மதிப்பிலான 52 பள்ளிகளில் கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.