கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் அதிமுக அரசு அதை முறையாகச் செயல்படுத்தவில்லை என்று மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: குடிநீர்ப் பிரச்னையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைப் பற்றி அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. திமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அதிமுக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை.
தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து அரசு சிந்திக்கவே இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது என்றார்.