வட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 17) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், வட தமிழகத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இருநாள்கள் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தீவிர அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக, வேலூர், திருத்தணியில் தலா 108 டிகிரி வெப்பநிலை பதிவானது.
திருச்சி, மதுரை விமானநிலையத்தில் தலா 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை தெற்கு, நாகப்பட்டினத்தில் தலா 104 டிகிரி, கடலூரில் 103 டிகிரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரி, தூத்துக்குடியில் 101 டிகிரி, நாமக்கல், பரங்கிபேட்டையில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.