சென்னை: நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை என்று தமிழக எம்.பிக்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் செவ்வாயன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழிலேயே தங்கள் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தனர். பின்னர் 'தமிழ் வாழ்க' என்னும் கோஷத்தையும் எழுப்பினர்.
இதன் காரணமாக 'தமிழ் வாழ்க' என்னும் ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில் நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை என்று தமிழக எம்.பிக்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்றத்தில் தமிழில்
உறுதிமொழி ஏற்ற
தங்கங்களை வாழ்த்துகிறேன்.
நாம் எந்த மொழியையும்
எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.
சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.
பயணிப்போம் - மொழி காக்க;
தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.