அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்த குழு: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்பிற்குள்பட்ட 13 மாவட்டங்களில்  உள்ள சில அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய  சென்னை உயர்நீதிமன்ற
அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்த குழு: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்பிற்குள்பட்ட 13 மாவட்டங்களில்  உள்ள சில அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி தாக்கல் செய்த மனு: 
மதுரையில் கடந்த மே 7-ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் செயற்கைச் சுவாசம் பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததாகச் செய்தி வெளியானது. மதுரையில் பல பெரிய மருத்துவமனைகள் உள்ள நிலையில், மின்தடை காரணமாக வேறு எங்கும் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படவில்லை. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவக் கருவிகள் முறையாக பராமரிக்கப்படாததும்,  மருத்துவர்களின் கவனக்குறைவுமே காரணமாகும். எனவே இந்த சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐஐடி பேராசிரியர்கள்,  காவல்துறை உயரதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மின்னியல் பொறியாளர், உயிரி மருத்துவப் பொறியாளர்களைக் கொண்டக் குழு அமைத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள், செயற்கைச் சுவாசக் கருவிகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை ஆய்வு செய்து, அவை முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். 
இதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அனைத்து உபகரணங்களை வைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கக் கோரி, மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த குருசங்கர் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள்,  ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் மற்றும் இரு வழக்குரைஞர்களை கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர். இந்தக் குழு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்பிற்குள்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள சில அரசு மருத்துவமனைகளுக்கு திடீரென சென்று செயற்கை சுவாசக் கருவிகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா? அவை செயல்பாட்டில் உள்ளனவா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com