குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்

குரூப்-1 தேர்வு மாதிரி விடைப் பட்டியலில் 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் அளித்துள்ளதாகக் கூறி 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்துக்கு மனு அளித்துள்ளதாக, டிஎன்பிஎஸ்சி உயர்நீதிமன்றத்தில்


குரூப்-1 தேர்வு மாதிரி விடைப் பட்டியலில் 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் அளித்துள்ளதாகக் கூறி 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்துக்கு மனு அளித்துள்ளதாக, டிஎன்பிஎஸ்சி உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணிபுரியும் நானும் இந்தத் தேர்வை எழுதினேன். இந்தத் தேர்வின் உத்தேச விடைப் பட்டியல் தேர்வு முடிந்த சில நாள்களில் வெளியிடப்பட்டது. அதில் கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில் 18 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்தன. நான் உள்பட பலரும் அந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிடக் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையைக் கண்டுகொள்ளாத தேர்வாணையம், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியிட்டது. மேலும் வரும் ஜூலை மாதம் குரூப்-1 பிரதான தேர்வை நடத்தவுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்று திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட்டிருந்தால், 175.5 மதிப்பெண் பெற்ற எனக்கு 195 மதிப்பெண் கிடைத்திருக்கும். எனவே, முதல்நிலைத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை குரூப்-1 பிரதானத் தேர்வை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் துணை செயலாளர் தாராபாய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குரூப்-1 தேர்வு மாதிரி விடைப் பட்டியலில் 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் அளித்துள்ளதாகக் கூறி 4 ஆயிரத்து 390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்துக்கு மனு அளித்துள்ளனர். இதை ஆய்வு செய்ய தேர்வாணையம் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு, மாதிரி விடைப்பட்டியலில், 12 கேள்விகளுக்குத் தவறான விடைகளை வெளியிட்டுள்ளதாகவும், 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளை வழங்கியுள்ளதாகவும், 7 கேள்விகளுக்குத் தவறான விடைகளை வழங்கியுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மனுதாரர் உள்ளிட்டோருக்கு 6 மதிப்பெண் வழங்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. மேலும், நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது. அரசுப் பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com