தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிக்க முடியும் என நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு ஆதரவாக சேலம் நாடக நடிகர்களை திங்கள்கிழமை நேரில் சந்தித்து சங்கப் பொருளாளர் நடிகர் கார்த்தி ஆதரவு திரட்டினார். பின்னர், நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த மூன்றரை ஆண்டுகால உழைப்புக்கு நாடக நடிகர்கள் மத்தியில் கிடைக்கும் அன்பே ஆறுதலாக உள்ளது. நடிகர் சங்கக் கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையாகும்.
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டி முடிக்க முடியும். நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கும் முன் தற்போது நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் அவசியமில்லாதது.
நடிகர் சங்கத்தில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் கண்டுபிடித்ததே எங்கள் அணிதான். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எங்களுக்கு எதிராக ராதாரவி தொடர்ந்து பேசினாலே வெற்றி நிச்சயமாகும். தேர்தலுக்காக விஜயகாந்தைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் நடத்தும் உரிமை இருந்தபோதிலும், பொதுவாக நீதிபதியைக் கொண்டே இந்தத் தேர்தலை நடத்துகிறோம்.
நடிகர் சங்கக் கட்டடத்தின் கல்வெட்டில் பெயர் இடம் பெறுவதற்காகவே தற்போது இந்தப் பிரச்னை நிலவி வருகிறது. அனைத்து செயற்குழுவிலும் விஷால் பங்கேற்றுள்ளார். அதற்கான விடியோ ஆதாரம் உள்ளது. நடிகர் சங்கத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு நல்ல விஷயத்தில் ஒரு தடங்கலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. தற்போது நடைபெறும் இந்தத் தேர்தலில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை என்றார்.