
வட தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பிறகு வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தாமதமாகத் தொடங்கிய பருவமழை, அரபிக்கடலில் உருவான வாயு புயல் ஆகியவற்றால், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்தது. குறிப்பாக, வடதமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில்
கடந்த இரண்டு வாரமாக வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. இதேநிலை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.
12 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 107 டிகிரி வெப்பநிலை பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி, மதுரை விமானநிலையம், நாகப்பட்டினத்தில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கு, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி, கடலூர், கரூர்பரமத்தி, தொண்டியில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், புதுச்சேரியில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவானது.
3 நாள்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு இல்லை: வட தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது:
தென்மேற்குப் பருவமழை காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 19) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூன் 19) அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
பருவமழை: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாள்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. இதேபோல, தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.