தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான இடங்களுக்கு மொத்தம் 18,438 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 8-ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமையுடன் (ஜூன் 17) விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு, பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இம்முறை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 3,559 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 354 பேரும் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in) இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
அதேபோன்று, ஜூலை 3-ஆம் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அயல்நாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜூலை 1-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.