காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பொதுப்பணித்துறையின் இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், உத்தமர்சீலியைச் சேர்ந்த விஜயகுமார் தாக்கல் செய்த மனு: காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன. இதற்கு இடையில் உள்ள முக்கொம்பு முதல் கல்லணை வரையிலான இடம் தீவுப்பகுதியாக அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், கொண்டையம்பேட்டை, திமிராயசமுத்திரம், பொன்ரங்காபுரம், பனையபுரம், கெளத்தரசநல்லூர், கம்பரசன்கோட்டை , வேங்கூர், பூசத்துறை, படித்துறை கிராமத்திற்கும் தடுப்பணை அமைத்தால் உதவியாக இருக்கும்.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளன. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்காகச் செல்லும் பாலங்கள் வலு இழந்துள்ளன. திடீரென வெள்ளம் வரும்பட்சத்தில் இந்த பாலங்கள் சேதமடையும் நிலை உள்ளது. எனவே உத்தமர்சீலி இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமம் வரையிலும் 2 இடங்களில் தடுப்பணைகள் அமைத்து கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பொதுப்பணித்துறையின் (நீர் ஆதாரம்) இணைத் தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.