நடிகர் சங்கத் தேர்தல்: அடையாறு எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதியில்லை

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 
நடிகர் சங்கத் தேர்தல்: அடையாறு எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதியில்லை


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கானத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அடையாறு எம்ஜிஆர்- ஜானகி கல்லூரிக்கு அருகில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன. தேர்தலின்போது மோதல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே எம்ஜிஆர்- ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவது உகந்தது அல்ல என பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். 
இதனையடுத்து காவல்துறையின் அனுமதியைப் பெற்று வருமாறு கல்லூரி நிர்வாகம் நடிகர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தலை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது. அடையாறு பகுதியில் பல முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகும். 
எனவே அந்தப் பகுதியில் உள்ள எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என கூறினார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், இந்தத் தேர்தலை பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தினால் போலீஸ் தரப்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை என வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், புறநகர்ப் பகுதியில் இந்த தேர்தலை நடத்தினால் வாக்களிக்க பலர் வரமாட்டார்கள் என தெரிவித்தார். 
இதனையடுத்து, அப்படியெனில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற இடங்களில் தேர்தலை நடத்தலாமே என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூன் 19) ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com