ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்கிடமாகப் பேசிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 21) ஒத்திவைத்தது.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் டி.எம். மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி கடந்த 5 -ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் பேசியது சர்சைக்குள்ளானது. இதையடுத்து அவர் மீது திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந் நிலையில், இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், எனது கருத்து எந்த சமூகத்திற்கு எதிராகவும் அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கில், தன்னை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துகுமார் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், முன்ஜாமீன் மனு புதன்கிழமை நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்துகுமார் தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 21 -ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.