பிற அரசு அலுவலகங்களில் இருந்து தலைமைச் செயலகத்துக்குப் பணியிட மாற்றம் மூலமாக வரும் ஊழியர்கள்,
அடிப்படை பயிற்சித் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா புதன்கிழமை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் விவரம் வருமாறு:
தமிழ்நாடு அமைச்சுப் பணிகள் அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணிகளில் உதவியாளராகப் பணிபுரிபவர்கள், பணியிட மாற்றத்தின் மூலமாக தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராகப் பணியில் நியமிக்கப்படலாம்.
இவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கான வயது 35-ஆகவும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான வயது வரம்பு 40-ஆகவும் இருக்கும். இவ்வாறு தலைமைச் செயலகப் பணியில் பணியிட மாற்றம் மூலம் நியமிக்கப்படும் உதவிப் பிரிவு அலுவலர்கள் இரண்டு மாதங்களுக்கு அடிப்படை பயிற்சியைப் பெற வேண்டும்.
இந்தப் பயிற்சியின் அடிப்படையில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அவ்வாறு தேர்ச்சி பெறாத ஊழியர்கள் மீண்டும் தங்களது பழைய பணியிடத்துக்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவர் என்று தனது உத்தரவில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த செயலாளர் ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.