திருச்சி மாநகரில் 120 உயர் கோபுரங்கள் மூலம் 3 வாரங்களுக்குள் 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அளிக்க உள்ளது. திருச்சியைத் தொடர்ந்து மதுரை, நாகர்கோவில் போன்ற நகரங்களிலும் 4ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ஹமாவட்டப் பொது மேலாளர் ஜி. பாபு ராஜ்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து சந்தாதாரர்களுக்கு பரிசு வழங்கும் வழங்கும் நிகழ்வு திருச்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கோவை, சேலம் மாநகரங்களில் தொடங்கப்பட்ட பிஎஸ்என்எல் 4 ஜி சேவை எவ்வித பிரச்னையும் இன்றி செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகரப் பகுதிகளில் 120 உயர் கோபுரங்கள் மூலமாக 3 வாரங்களுக்குள் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி பிஎஸ்என்என் செல்லிடப்பேசி இணைப்பு பெற்ற பழைய சந்தாதாரர்களுக்கு 4 ஜி சேவைக்காக புதிய சிம்கார்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. புதியசந்தாதாரர்களுக்கு ரூ.30 கட்டணத்தில் வழங்க 40 ஆயிரம் சிம்கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை வரை சுமார் 25 ஆயிரம் புதிய சந்தாதாரர்கள் 4ஜி சிம்கார்டு பெற்றுச் சென்றுள்ளனர். புறநகர்ப் பகுதியான பிக்சாண்டார்கோவில், திருவெறும்பூரும் 4 ஜி சேவைக்கான பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளது.
திருச்சியைத் தொடர்ந்து மதுரை, நாகர்கோவில் போன்ற நகரங்களிலும் 4ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு சிம்கார்டு மூலம் 32 நாடுகளில் சிறப்புக் கட்டணத்தில் 4 ஜி சேவை பெறலாம். நிதி பற்றாக்குறை காரணமாக ஒரு சில இடங்களில் உள்ள உயர்கோபுரங்களுக்கான மின்கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உயர்கோபுரங்கள் மூலம் சேவை பாதிக்கப்பட்டது. ஒரிரு நாள்களில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டன என்றார்.
பேட்டியின் போது, தெற்கு மண்டலப் பொதுமேலாளர்( செல்லிடப்பேசி) கே.பாலாஜி, துணைப் பொது மேலாளர்கள் வீரராகவன், கண்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.